Archives: பிப்ரவரி 2022

மகிழ்ச்சியை தெரிந்துகொள்ளுதல்

எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து "மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது" என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

"பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது" இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் ​வாழ்கின்றனர்.

பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.

பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு" கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான" (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.

நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.

நற்செய்தியின் மகிழ்ச்சி

1964 ஆம் ஆண்டு ஒரு மாலையில், மகா அலாஸ்க்காவின் நிலநடுக்கம், நான்கு நிமிடங்களுக்கு மேலாக நீடித்து, 9.2 அளவு பதிவாகி, அனைத்தையும் அசைத்தும், உதிர்த்தும் போட்டது. நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நகரத்தின் பகுதிகள் உள்வாங்கி, பெரும் பள்ளங்களும், இடிபாடுகளும் மட்டும் இருந்தன. அந்த பயங்கரமான இரவின் இருளினூடே, செய்தியாளர் ஜெனி சான்ஸ் தனது மைக்கை பிடித்திக்கொண்டு, தங்கள் வானொலிகளின் அருகிலே தவிப்போடு இருந்த மக்களுக்கு செய்திகளை வழங்கினார்: புதர்களில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு கணவர் தன் மனைவி உயிரோடிருப்பதை கேட்டறிந்தார், சாரணர் படையின் முகாமிற்கு சென்ற தங்கள் மகன்கள் நலமாயிருப்பதை அந்த கலக்கமடைந்த குடும்பத்தினர் கேட்டறிந்தனர், காணாமல் போன தங்கள் பிள்ளை மீண்டும் கிடைத்த செய்தியை அந்த தம்பதியினர் கேட்டனர், வானொலி வரிக்கு வரி நல்ல செய்திகளை இந்த அழிவின் மத்தியிலும் அறிவித்தது.

தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளை கேட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் இப்படியாக தான் உணர்ந்திருப்பார்கள், அவர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (61:1) என்றார். தரிசாய்ப்போன தங்கள் தலைகீழான வாழ்க்கையையும், இருளடைந்த எதிர்காலத்தையும் அவர்கள் வெறித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயாவின் தெளிவான குரல் அனைத்தும் இழந்ததுபோல தோன்றிய தருவாயில் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டுவந்தது. தேவன், "இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்… நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து"(வ.1,4) இவைகளை செய்ய நோக்கமாயிருந்தார். பயங்கரத்தின் மத்தியிலே, ஜனங்கள் தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தை கேட்டனர், அது அவருடைய நற்செய்தியே.

இன்று நமக்கு, இயேசுவிலே, தேவனுடைய நற்செய்தியை கேட்கிறோம். இதுதான் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு பொருள். நம் பயங்களினுடே, வலிகளினுடே, மற்றும் தோல்விகளின் மத்தியில் அவர் நற்செய்தியை வழங்குகிறார்.அதினால், நம் துன்பங்கள் விலகி சந்தோஷத்திற்கு வழிவிடும். 

குடும்பத்தின் அங்கத்தினர்

ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி நாடகம், இதில் ஒரு கற்பனை குடும்பம் 1900 களின் முற்பகுதியில் இருந்த சமூக கட்டமைப்பின் வழியே பயணிப்பதை பற்றி இருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரம், ஆரம்பத்தில் அந்த குடும்பத்தின் பணியாளராய் வேலை செய்து, பின்னர் எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் அதே குடும்பத்தின் இளையவளாக இருந்த மகளை திருமணம் செய்தார். குறிப்பிட்ட காலம் துரத்திவிடப்பட்ட அந்த தம்பதியினர், அவர்களுடைய குடும்பத்திற்கும், வீட்டுக்கும் திரும்புகின்றனர், இப்போது அந்த புது மாப்பிளை அந்த குடும்பத்தின் அங்கத்தினராக மாறுகிறார், ஒரு வேலைக்காரனாக அவருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், சலுகைகளும் இப்போது குடும்பத்தின் அங்கத்தினராக அவருக்கு கிடைக்கிறது.

நாமும் கூட,"அந்நியரும் பரதேசிகளுமாய்" (எபேசியர் 2:19) முன்னர் இருந்தோம். மேலும் தேவனுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு புறம்பாயிருந்தோம். ஆனால் இயேசுவால், அணைத்து விசுவாசிகளும், அவர்கள் யாராய் இருந்திருந்தாலும், தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு "தேவனுடைய வீட்டார்" (வ.19) என அழைக்கப்படுகிறார்கள்.

தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராக இருப்பது வியத்தகு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. நமக்கு "தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."(3:12) அதினால் தேவனோடு அளவில்லாத, தடையில்லாத தொடர்பை நாம் அனுபவிக்கிறோம். நாம், இன்னும் பெரிய குடும்பத்தின் அங்கத்தினராய் மாறுகிறோம், நம்மை தாங்கவும், உற்சாகப்படுத்தவும் இருக்கும் விசுவாச சமூகமே அது (2:19-22). தேவகுடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் உதவும் சலுகை உடையவர்களாய், தேவனுடைய அளவிட முடியா அன்பை மகத்தாய் பற்றிகொள்ளமுடியும் (3:18).

பயம் அல்லது சந்தேகம் நம்மை சுலபமாக அந்நியரை போல உணரவைக்கும், மேலும் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாய் மாறுவதால் உண்டாகும் பலன்களை அனுபவிப்பதில் இருந்து முற்றிலுமாய் நம்மை விலக்கி போடும். ஆனால் தேவனுடைய இலவசமும், உதாரத்துவமுமான அன்பின் வெகுமதிகளின் உண்மை தன்மைக்கு செவிகொடுத்து, மீண்டும் ஒருமுறை அதை பற்றிக் கொள்ளலாம் (2:8-10). மேலும் அவருடையவர்களாய் இருப்பதினால் உண்டாகும் பிரமிப்பில் நாம் களிகூரலாம்.

கதவை தவிர்க்கவும்

அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம்  தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.

கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.

அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.